ஓய்வை அறிவித்து இன்றோடு ஓர் ஆண்டு நிறைவு: ரசிகர்கள் மிஸ் செய்யும் எம்.எஸ்.தோனி

 ஓய்வை அறிவித்து இன்றோடு ஓர் ஆண்டு நிறைவு: ரசிகர்கள் மிஸ் செய்யும் எம்.எஸ்.தோனி

இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாக இருந்தவர் தோனி. அவரின் "மிடாஸ் டச்" அதாவது தொட்டதெல்லாம் பொன்னான காலம் கிரிக்கெட்டின் அழிக்க முடியாத வரலாறுகள். அந்த வரலாற்று சுவடுகளில் ஓர் பெயர் எப்போதும் இருக்குமென்றால் அது தோனி என்றால் யாராலும் மறுக்க முடியாது.

2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிதான் இந்தியாவுக்காக தோனி விளையாடிய கடைசிப் போட்டி. அதன் பின்பு ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் தோனியை பார்க்கவில்லை. இப்படியே காலம் ஓடியது... தோனி மீண்டும் விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிக்கப்போகிறாரா என்ற யூகங்கள் வளர்ந்துக்கொண்டே சென்ற காலக்கட்டம் அது.

கடந்தாண்டு இந்தியா தன்னுடைய 74-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த நிலையில் இரவு 7.29 மணிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றிக்கூறி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட்டின் கதாநாயகன் மகேந்திர சிங் தோனி.

எப்படியாவது தங்களுடைய ஆதர்ச நாயகனை இந்திய அணியின் சீருடையில் மீண்டும் பார்த்திட முடியாதா என ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு அவரின் ஓய்வு அறிவிப்பு பேரிடி என்றுதான் சொல்ல வேண்டும். தோனியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பார்த்துவிட வேண்டும் என்று அப்போது ஓராண்டுக்கும் மேலாக ரசிகர்களை தவிக்கவிட்டார் தோனி.

தோனி ஓய்வுப்பெற்றுவிட்டாலும் மஞ்சள் நிற ஜெர்சியில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவது, மைதானத்தில் அவரை பார்ப்பது மட்டுமே ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல். என்னதான் இருந்தாலும் இந்திய அணியின் ஜெர்சியில் பார்ப்பது போல வருமா என ரசிகர்கள் விசும்பினாலும் இப்போதும் உண்மை அதுதானே.

இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடிய தோனி, அதன்பின்னர் மீண்டும் இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் பல்வேறு கிரிக்கெட் வீர்ரகள், விமர்சகர்கள் என எல்லோரும் தோனி ஓய்வுக் குறித்த கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் மனுஷன் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை. அவருக்கு எப்போதும் தனி ஸ்டைல் உண்டு. தன்னுடைய ஓய்வுக் குறித்த அறிவிப்பையும் அலட்டிக்காமல் அதே ஸ்டைலில் தெரிவித்தார்.

2005 இல் தொடங்கிய தோனியின் சகாப்த பயணம் சென்னையில் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைந்தது. ஏன் தோனியை ரசிகர்களுக்கு இவ்வளவு பிடிக்கிறது ? சச்சின் சொன்னதுப்போல இந்திய கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாக அவர் இருந்ததே காரணம்.

மேலும் தனி மனித ஒழுக்கமும் அவரின் குணநலன்களும் ரசிகர்களுக்கு பாடம். அதனால்தான் இத்தனை ஆண்டுகள் தோனியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், இன்னும் கொண்டாடுவார்கள். நாளையே அவர் ஐபிஎல்லில் இருந்து விலகினாலும் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகுக்கு தோனி எப்போதும் ஓர் சகாப்தமே.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post