வேற வழி தெரியல ஆத்தா... சம்பளம் விவகாரத்தில் அரசு விளக்கம்!


                                   air india salary problem




வேற வழி தெரியல ஆத்தா... சம்பளம் விவகாரத்தில் அரசு விளக்கம்!

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனம்தான் ஏர் இந்தியா. இந்நிறுவனத்துக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில்

ஏர் இந்தியா தவித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா, சம்பளக் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பாதிப்பு தொற்றிக்கொண்ட நிலையில் ஏர் இந்தியா பங்கு விற்பனை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. மறுபுறமோ, கொரோனா பாதிப்பால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தைத் தனது ஊழியர்கள்மீது சுமத்தியுள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகத் தனது ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்குச் சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் திறன், உடல்நலம், மிகையான ஊழியர்கள் ஆகிய அடிப்படையில் யாரையெல்லாம் விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடி ஆலோசனை!

ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியா தனியார் வசம் செல்லவிருக்கும் சூழலில் ஏற்கெனவே கவலையில் ஆழ்ந்துள்ள ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்புவதற்கான அதிகாரம் ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அனுப்பிவைக்கப்படுவார்கள். அதற்கு மேல் ஐந்து ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.


இந்த விவகாரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இப்போதைய காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கினால் மட்டும் போதாது. அதை வைத்துக்கொண்டு நிறுவனத்தை நடத்த இயலாது. செலவுகளைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கையை மேற்கொண்டுதான் ஆகவேண்டும். அதுதான் இங்கே இப்போது நடந்திருக்கிறது. இப்போதைய நெருக்கடியான காலத்தில் அரசிடமும் ஏர் இந்தியா பெரிய உதவியைப் பெற இயலாது. மற்ற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இக்கட்டான சமயங்களில் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க இதுபோன்ற கடினமான முடிவுகளை மேற்கொண்டுதான் ஆகவேண்டும் என்று அவர் நிலைமையை எடுத்துரைத்துள்ளார்.



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post